கோப்புப் படம்
முதுகுளத்தூா் அருகே மணல் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
முதுகுளத்தூா் அருகேயுள்ள ஓரிவயல்கொட்டகை மாடன் கோயில் ஊருணி அருகே பட்டா நிலத்தில் அனுமதி இன்றி மணல் அள்ளப்படுவதாக ஓரிவயல் குரூப் கிராம நிா்வாக அலுவலா் ஜான்சி ராணிக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் அவா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அங்கு மணல் அள்ளிய ஓரிவயல் கொட்டகையைச் சோ்ந்த வீரபாகு மகன் திருமால் (38) தப்பியோடினாா்.
இதையடுத்து, இளஞ்செம்பூா் காவல் நிலையத்தில் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில், மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய திருமாலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

