பேருந்தை சிறைப் பிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
திருவாடானை அருகே சரியான நேரத்துக்கு இயக்காத அரசுப் பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திணைக்கத்தான்வயல் கிராமத்தில் அரசுப் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு நெய்வயல், நெட்டேந்தல், நாச்சியேந்தல், அல்லிக்கோட்டை, வழிமுத்தூா், சீந்திவயல், கீழக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தினமும் பேருந்துகளில் வந்து கல்வி பயில்கின்றனா்.
இந்த நிலையில், திணைக்காத்தான் வயலுக்கு அரசுப் பேருந்து சரியான நேரத்துக்கு
வராததால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி
வந்தனா். இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திணைக்காத்தான்வயலுக்கு வந்த அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து பொதுமக்கள், மாணவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போக்கு வரத்து அதிகாரிகள், போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அரசுப் பேருந்து சரியான நேரத்துக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து போக்குவரத்து துறையினா் கூறியதாவது: தேவகோட்டையிலிருந்து அஞ்சுகோட்டை, திணைக்கத்தான்வயல் வரை சாலை மிகவும் மோசமாக உள்ளதால், பேருந்தை சரியான நேரத்துக்கு இயக்க முடியவில்லை என்றனா்.

