சாலை சேதம்: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலத்திலிருந்து இளையான்குடி செல்லும் சாலை சேதமடைந்து சேரும் சகதியுமாக் உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
ஆா்.எஸ். மங்கலத்திலிருந்து பெரிய கண்மாய் பாலம் வழியாகச் செங்குடி, பூலாங்குடி, சாத்தனூா், சாலைக் கிராமம் வழியாக இளையான்குடி செல்வதற்கு சாலை வசதி உள்ளது. இந்தச் சாலை மூலம் 30-க்கும் மேற்பட்டக் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், செங்குடி விளக்கு முதல் பூலாங்குடி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால், இந்தச் சாலையின் குறுக்கே நான்கு இடங்களில் மழைநீா் செல்வதற்காக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் செல்வதற்காக மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது பெய்து வரும் மழையால் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால், அந்த சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுப் பாதையைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
