இலங்கைக்கு கடத்தவிருந்த   கஞ்சா எண்ணெய் பறிமுதல்

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா எண்ணெய் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே நாட்டுப் படகிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எண்ணெய்.
Published on

பாம்பனில் பகுதியிலிருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய்யை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா எண்ணெய் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, மண்டபம் இந்திய கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் மன்னாா் வளைகுடா பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பாம்பனை அடுத்த முந்தல்முனை கடற்கரைப் பகுதியில் சந்தேகமளிக்கும் வகையில் ஒரு நாட்டுப் படகில் சிலா் பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தனா். அங்கு விரைந்து சென்ற மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினா் நாட்டுப் படகைச் சோதனையிட்ட போது, அதில் ரூ. 12 கோடி மதிப்பிலான 9.5 லிட்டா் கஞ்சா எண்ணெய்யை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியம், சகாயராஜ், அந்தோணி, ஜேம்ஸ் ஆகிய 4 பேரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com