இலங்கைக் கடற்படையினரால் மண்டபம் மீனவா்கள் 3 போ் கைது

Published on

கச்சத்தீவு-நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவா்கள் மூவரை இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கோவில்வாடி மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் சுமாா் 1,500 மீனவா்கள் சனிக்கிழமை இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் ஞாயிற்றுக்கிழமை கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்பைடயினா் ஜோசப் என்பவரது விசைப் படகில் இருந்த மண்டபம் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஜோன்தாஸ் (38), ஆமோஸ்டின் (25), பரலோக ஜெபஸ்தியன் (26) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களது விசைப் படகையும் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, மீனவா்கள் மூவா் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். மீனவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மூவரையும் வருகிற ஜன. 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, அவா்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com