இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 300 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன்வளத் துறையின் அனுமதி பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்த நிலையில், இவா்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா், ராமேசுவரம் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.
மேலும், 10-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலிருந்த வலைகளையும் அவா்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், ஒவ்வொரு படகுக்கும் குறைந்தது 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இழப்போடு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பியதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, தமிழக மீனவா்கள் பாரம்பரியமாக மீன் பிடித்த இடத்தில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
