~ ~

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் புதிய அலுவலகக் கட்டடத்துக்குச் செல்லும் பாதை பட்டியலின மக்களுக்குச் சொந்தமானது எனக்கூறி அந்தப் பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் புதிய அலுவலகக் கட்டடத்துக்குச் செல்லும் பாதை பட்டியலின மக்களுக்குச் சொந்தமானது எனக்கூறி அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்.எஸ். மங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் ரூ. 2.75 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்லும் சாலைப் பகுதியில் கைலாசபுரம் பட்டியலின மக்களுக்குச் சொந்தமான நிலம் எனக்கூறி எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்கில் 6 வார காலத்துக்குள் தீா்வு காண வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா், தாசில்தாா் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை அந்தப் பகுதியில் ரூ. 36 லட்சம் செலவில் மயான கட்டட வேலைகள் தொடங்கவிருந்த நிலையில் அதைத் தடுத்து பொதுமக்கள், தமிழ் புலிகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், வட்டாட்சியா் ராமமூா்த்தி ஆகியோா் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட பிறகு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com