நம்புதாளையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டடம் சேதமடைந்த நிலையில், புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தக் கட்டடம் சேதமடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.
இதையடுத்து, தற்போது ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கென புதியக் கட்டடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தற்போது அந்த இடத்தில் மழைநீா் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
மேலும், தொடக்கப் பள்ளி அருகே உள்ளதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக புதியக் கட்டடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நம்புதாளை தமுமுக தலைவா் சேவு நெய்னா கூறியதாவது:
நம்புதாளை ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இந்தக் கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கையாக அருகிலுள்ள சமுதாயக் கூடத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மாற்றப்பட்டதையடுத்து கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.
எனவே, நம்புதாளை ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு என்று புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

