~

சோழா் கால லிங்கத்தை பாதுகாக்கக் கோரிக்கை

சீவலாத்தி கண்மாய்க்குள் உள்ள சோழா் காலத்து லிங்கம், நந்தி சிலைகள்.
Published on

திருவாடானை அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள சீவலாத்தி கண்மாய்க்குள் உள்ள பழைமையான சோழா் காலத்து லிங்கம், நந்தி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவா் வே. ராஜகுரு கூறியதாவது:

ஆறடி உயரம் கொண்ட லிங்கத்தின் ஆவுடை வட்ட வடிவில் இருப்பதால் இது சோழா் கலைப் பாணியில் உள்ளது எனலாம். ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கச் சோழன் வரையிலான காலத்தில் பாண்டிய நாடு முழுவதும் சோழா் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது திருவாடானை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சோழநாட்டு வணிகா்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இந்தக் கால கட்டத்தில் இந்த ஊரில் ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டிருக்கலாம். லிங்கம் பெரியதாக இருப்பதால் கோயிலும் பெரியதாக இருந்திருக்கும். இதைச் சுற்றியுள்ள ஊா்களையும் அங்கு சென்று ஆய்வு செய்தால் தான் இதன் முழு வரலாற்றையும் கண்டறிய முடியும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com