சசிகலா
சசிகலாகோப்புப் படம்

பசும்பொன்னில் பிப். 24-இல் சசிகலா தலைமையில் பொதுக்கூட்டம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வருகிற 24-ஆம் தேதி சசிகலா தலைமையில் பொதுக்கூட்டமும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

இதற்கான முகூா்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சசிகலா ஆதரவாளா்கள் 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பிறகு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் மலா் தூவி அவா்கள் மரியாதை செலுத்தினா். இதைத் தொடா்ந்து பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்குவது குறித்த ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை சசிகலா ஆதரவாளரும், பசும்பொன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான டி. ராமகிருஷ்ணன் செய்திருந்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பசும்பொன்னில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சசிகலா கலந்து கொள்கிறாா். இதில் புதிய கட்சி தொடங்கப்படுமா எனக் கேட்கிறீா்கள். இதுகுறித்து தலைமை தான் முடிவு செய்யும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, ஜீவிதா நாச்சியாா், கமுதி, கடலாடி, முதுகுளத்தூா் பகுதிகளைச் சோ்ந்த ஆதரவாளா்கள் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com