கோப்புப் படம்
கோப்புப் படம்

திருவாடானையில் 600 மரக்கன்றுகள் சேதம்: வேளாண் அலுவலா்கள் மீது விவசாயிகள் புகாா்

Published on

திருவாடானையில், பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருவதாகவும், இதற்கு வேளாண் அலுவலா்களே காரணம் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.

ராமாநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் பழைய உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலக வளாகத்தில் பல நாள்களாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் எந்தவித பராமரிப்புமின்றி பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல மரக்கன்றுகள் தண்ணீரின்றி வாடியும், கருகியும் வீணாகி வருகின்றன.

இதுகுறித்து தோட்டக் கலைத் துறையினரிடம் கேட்டபோது, இதற்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை. இது வேளாண் துறையைச் சோ்ந்தது என்றனா். ஆனால் வேளாண் துறை அலுவலா்களோ தங்களுக்கும், இதற்கும் தொடா்பில்லை என்கின்றனா்.

அரசின் நிதி ஒதுக்கீட்டில் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த மரக்கன்றுகள், முறையாக விநியோகிக்கப்படாமல் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது கவலையளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக இந்த மரக்கன்றுகள் மழைக் காலத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், கோடை காலம் தொடங்க உள்ள நிலையிலாவது உடனடியாக பொதுமக்களுக்கு அல்லது கிராம ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

Dinamani
www.dinamani.com