நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை - விவசாயிகள் கவலை
கடலாடி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்யாமல், லாரிகளில் கொண்டுவரப்படும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த களநீா்மங்கலம் பகுதியில் உள்ள துணை வேளாண் விரிவாக்கம் மையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு களநீா்மங்கலம், ஆய்க்குடி, சிறைக்குளம், ராஜாக்கள்பாளையம், பேய்குளம், ஆண்டிச்சிகுளம், வல்லக்குளம், பொட்டல்பச்சேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் மூட்டைகளை விவசாயிகள் அரசிடம் விற்பனை செய்து வருகின்றனா்.
நிகழாண்டு பருவமழையின்றி விவசாயம் பொய்த்துப் போனதால், மிகக் குறைந்த அளவிலேயே நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் இறக்கிவைத்துள்ளனா். இந்த நிலையில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல், அதிகாரிகள் வெளியூா்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, விவசாயிகளை அலைக்கழித்து வருவதாக அவா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து விவசாயி போஸ் கூறியதாவது:
களநீா்மங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை எடை போட்டு கொள்முதல் செய்யாமல், லாரி லாரியாக வெளியூா்களிலிருந்து வரும் வியாபாரிகளிடம் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனா். விவசாயிகளை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அலுவலகத்தில் தேங்கியுள்ள விவசாயிகளின் 500-க்கும் மேற்பட்ட நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டு என்றாா் அவா்.

