அரசுத் துறையில் பணியில் சேருவதற்கு போலி நியமன ஆணை வழங்கி ரூ. 27 லட்சத்து 33 ஆயிரம் மோசடி செய்த ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், எஸ். வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சைக்கிளி மகன் காளிதாஸ் (28). இவர், கிராமங்கள்தோறும் சென்று மளிகைப் பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். மேலும் ஒரு இசைக் குழுவில் மேடை நடனக் கலைஞராகவும் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காளிதாஸுக்கு சிவகங்கை அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை (70) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அண்ணாத்துரை ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர்.
காளிதாஸுடம் அண்ணாத்துரை அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியதால், கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 80 ஆயிரத்தை காளிதாஸ் அவரிடம் வழங்கினாராம். அவரும், அதற்கு பதிலாக கால்நடை பராமரிப்புத்துறையில் பணியாற்றுவதற்குரிய பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார். இதை நம்பி அதே பகுதியைச் சேர்ந்த 12 பேர் தங்களுக்கும் அரசுத் துறையில் வேலை வாங்கித் தரும்படி கேட்டு ரூ. 26 லட்சத்து 53 ஆயிரத்தை அண்ணாத்துரையிடம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு காளிதாஸ் பணியில் சேர சென்றபோது அது போலி நியமன ஆணை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காளிதாஸ் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தரமாணிக்கம், சார்பு ஆய்வாளர் சசிகலா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அண்ணாத்துரை மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த போலி நியமன ஆணைக்கான சான்றிதழ், ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.