சிவகங்கையில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
By DIN | Published On : 06th February 2019 08:21 AM | Last Updated : 06th February 2019 08:21 AM | அ+அ அ- |

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரி வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை புகுந்து மாணவரை, மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
சிவகங்கை அருகே உள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகன் அஜீத்ராஜா(19). இவர், சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன், இவருக்கும் மாணவர்கள் சிலருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, அஜீத்ராஜா வழக்கம்போல் செவ்வாய்க்கிழமை காலை கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, கல்லூரிக்குள் புகுந்த மர்ம நபர்கள், அஜீத்ராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். அதன்பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிவகங்கை சரக துணைக் காவல் கண்காணிப்பாளர் அப்துல்கபூர், நகர் காவல் ஆய்வாளர் அழகர், சார்பு-ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் போலீஸார், பலத்த காயமடைந்த அஜீத்ராஜாவை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் காரணமாக, கல்லூரி மாணவ, மாணவியர் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வீட்டுக்குச் சென்றனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து குற்ற
வாளிகளை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு: இதையடுத்து, அஜீத்ராஜா நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். அப்போது அவர்கள், அஜீத்ராஜா நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் அறிந்து கொள்வதற்காக, காவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...