கே.வைரவன்பட்டி கண்மாயில் உள்ள வேலிக்கருவை மரங்களை மறுஏலம் விடக் கோரிக்கை
By DIN | Published On : 04th January 2019 01:33 AM | Last Updated : 04th January 2019 01:33 AM | அ+அ அ- |

திருப்பத்தூர் தாலுகா கே.வைரவன்பட்டி கிராமத்தில் கண்மாயில் உள்ள கருவேலம் மரங்களை வெட்டுவதற்கு மறு ஏலம் விடவேண்டும் என்று வலியுறுத்தி கே.வைரவன்பட்டி கிராம பொதுமக்கள் தேவகோட்டை சார் ஆட்சியர் ஆஷா அஜித்திடம் அண்மையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: கே.வைரவன்பட்டி கிராமத்தின் கண்மாயில் உள்ள கருவேலம் மரங்களை வெட்டுவதற்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மரங்களை வெட்டுவதற்கான ஏலத்தை குண்டேந்தல் பட்டியைச் சேர்ந்த தமிழரசு என்பவர் எடுத்துள்ளார். அவர் குறிப்பிட்ட காலத்தில் மரங்களை வெட்டாமல் மரம் வளர்ந்த பின்பு வெட்டினால் கூடுதலாக லாபம் கிடைக்கும் என்று கருதி குறிப்பிட்ட மரங்களை மட்டும் வெட்டி விட்டு மற்ற மரங்களை வெட்டாமல் விட்டு விட்டார். தற்போது அந்த மரங்கள் பெரிதாக வளர்ந்து உள்ளன. தற்போது அந்த மரங்களை வெட்டுவதற்கு காலநீட்டிப்பு செய்துதரவேண்டும் என அரசிடம் விண்ணப்பித்துள்ளார். எனவே அதிகாரிகள் கண்மாயில் உள்ள மரங்களை ஆய்வு செய்து புதிதாக ஏலம் நிர்ணயம் செய்துகே.வைரவன்பட்டி ஊராட்சிக்கும் அரசுக்கும் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.