சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் இலவச புகைப்படம் மற்றும் விடியோ எடுப்பது குறித்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கான நேர்முகத் தேர்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : இந்த பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் போட்டோ ஸ்டுடியோ, கேபிள் தொலைக்காட்சி, சினிமாத் துறை, தொலைக்காட்சி மற்றும் செய்தித் தாள் துறைகளில் வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு உள்ளது. இதில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு 18 முதல் 45 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது (அசல் மற்றும் நகல்) அரசு வழங்கிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை மற்றும் 3 மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கு நேரடியாக வர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பயிற்சி முடிந்த பின்பு உதவித் தொகையாக ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.