மானாமதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சரணடைந்தார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் ஊ.சரவணன். முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான இவர், அமமுக ஒன்றியச் செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைப்பயிற்சி சென்றபோது, மர்மக்கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை சில நாள்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். ஆனால் வழக்கின் முதல் எதிரியான திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் இதே கிராமத்தைச் சேர்ந்த தொத்தல் என்ற முத்துச்செல்வம் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் முத்துச்செல்வத்தைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்த தங்கராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிப்காட் போலீஸார் தெரிவித்தனர்.