மத்திய, மாநில அரசுகளின் துணிச்சலான முடிவு, அதனுடைய செயல்பாடு ஆகியவை வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித் தரும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் வெளியிடுகின்ற எதையும் இதுவரை திமுக செயல்படுத்த வில்லை. ஆகவே திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு வெற்றுக் காகிதம் தான்.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி 19 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அரசியலில் வெற்றிடம் என்பது எப்போதும் இருந்ததுமில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. கடந்த கால ஆட்சியில் மத்திய, மாநில அரசுகளின் துணிச்சலான முடிவு, அதனுடைய செயல்பாடு ஆகியவை வரும் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித் தரும் என்றார்.