திருப்பத்தூர் அருகே இளைஞர் கொலை: 3 பேர் கைது
By DIN | Published On : 05th May 2019 01:25 AM | Last Updated : 05th May 2019 01:25 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அருகே கள்ளுப்பட்டியைச் சேர்ந்த மாதவன் மகன் பழனியப்பன்(35). இவருக்குத் திருணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார். பழனியப்பனுக்கும் கொங்கரத்தியைச் சேர்ந்த சகாதேவன் மகன் நாராயணனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கண்டரமாணிக்கத்தில் இருந்து கள்ளிப்பட்டிக்குச் சென்று கொண்டிருந்த பழனியப்பனை, பொன்னன்குடி என்ற இடத்தில் வழிமறித்து நாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகர், செல்வகுமார், அருண், வெற்றி ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த பழனியப்பன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருக்கோஷ்டியூர் போலீஸார், கொலையில் தொடர்புடைய கொங்கரத்தியைச் சேர்ந்த சகாதேவன் மகன் நாராயணன்(30), கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர்(30), கல்லலைச் சேர்ந்த தயாளன் மகன் செல்வகுமார் (32) ஆகியோரைக் கைது செய்தனர்.
இதில் கைதான 3 பேர் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இக்கொலைச் சம்பவம் குறித்து திருக்கோஷ்டியூர்
காவல் ஆய்வாளர் மலையரசி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய கல்லலைச் சேர்ந்த அருண், வெற்றி ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.