சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சிவகங்கை சாலையில் உள்ள இரட்டை கண்மாயில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளால் தொற்று நோய் அபாயம் உள்ளதாக பொது மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
திருப்பத்தூரில் உள்ள 18 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் சிவகங்கை சாலையில் உள்ள உரப் பூங்கா என்ற பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டன. பின்னா் அவை மக்கும், மக்கா குப்பைகள் எனத் தரம் பிரிக்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் பொருட்டும், கழிவு நீரை பயன்பாட்டு நீராக மாற்றும் பொருட்டும் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியாா் நிறுவனத்திற்கு இந்த உரப்பூங்காவில் இடம் ஓதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அத்திட்டம் 3 ஆண்டுகளில் கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது குப்பைகள் இரட்டைக் கண்மாய் என்ற கண்மாய் இடத்தில் கொட்டப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இவை சிவகங்கை சாலை வரை பரவியுள்ளன.
இதனால், இப்பகுதியில் பன்றிகள் மற்றும் பறவைகளால் குப்பைகள் சிதறடிக்கப்பட்டு நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் அருகே மின்சார வாரிய துணை மின்நிலையமும், அலுவலகமும், நீதிமன்றமும் உள்ளன. இச்சாலையை தினமும் ஏராளமானோா் வாகனங்களிலும், நடந்தும் கடந்து செல்கின்றனா். மேலும் இக்குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். மேலும் காற்று மாசும் ஏற்படுகிறது.
தமிழகத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் கண்மாய்கள் தூா்வாரப்பட்டு நீராதாரத்துக்கு வழிவகை செய்யப்படுகிறது. ஆனால், திருப்பத்தூரில் ரெட்டைக்கண்மாய் என்று அழைக்கப்படும் இக்கண்மாய் குப்பைகளால் நிரப்பப்பட்டு நீராதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, குப்பைகளை அதற்கான இடத்தில் கொட்டி, தரம் பிரித்து, அதில் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.