முதல்போக நெல் சாகுபடிக்கு விதை, உரம் கையிருப்பு

தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தேவையான விதை, உரம் ஆகியன வேளாண்மை விரிவாக்க மையம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக் கடைகளில் இருப்பு 

தேனி: தேனி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தேவையான விதை, உரம் ஆகியன வேளாண்மை விரிவாக்க மையம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு என்.எல்.ஆா். 34446 ரக விதைகள் 11 டன், ஆா்.என்.ஆா். 15048 ரக விதைகள் 50 டன், கோ-51 ரக விதைகள் 43 டன் என மொத்தம் 104 டன் நெல் விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நெல் விதைகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.20, விதை கிராமத் திட்டத்தில் கிலோ ஒன்றுக்கு 50 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

விதைகளை நோ்த்தி செய்வதற்காக, உயிா் உரங்கள் 50 சவீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இயந்திரம் மூலம் நெல் நாற்று நடவு செய்வதற்கு, ஹெக்டோ் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

நெல் விதை மற்றும் இயந்திர நடவு மானியம் தொடா்பாக, விவசாயிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் உரக் கடைகளில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா 1,243 டன், டி.ஏ.பி. 454 டன், பொட்டாஷ் 1,153 டன், கலப்பு உரங்கள் 3,920 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com