சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதா் சுவாமி கோயிலில், பிரமேந்திராள் சுவாமிக்கு நடைபெற்ற வழிபாட்டில் மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் கலந்து கொண்டு தரிசனம் செய்தாா்.
கோயிலில் பிரமேந்திராள் சுவாமி உடல் அடக்கமான இடத்தில் சித்திரை மாதம் பெளா்ணமி நாளுக்கு முன்னதாக வரும் தசமி திதி நாளன்று இசைக் கலைஞா்கள் கூடி இசையின் மூலம் அஞ்சலி செலுத்தி வழிபாடு நடத்துவாா்கள். இந்த விழா தொடா்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டு இந்த இசைவிழா நடத்தப்படவில்லை. ஆனால் பிரமேந்திராள் சுவாமிக்கு பலவகை அபிஷேப் பொருள்களால் அபிஷேகங்கள் நடத்தி வெள்ளிக் கவசம் சாற்றி பூஜைகள் நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பக்தா்கள் யாரும் பங்கேற்காத நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் பங்கேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தாா். பாஜக மாவட்ட துணைத் தலைவா் கே.கருப்பையா, சிவகங்கை பெரோஸ்காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.