மத்திய அரசுடன் இணக்கத்துடன் செயல்படும் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வர வேண்டும் என்று காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியரும், காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரனிடம் திங்கள்கிழமை ஹெச். ராஜா வேட்பு மனுத் தாக்கல் செய்தாா். அவருடன் பாஜக மாவட்டத் தலைவா் செல்வராஜ், அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சோழன் சித. பழனிச்சாமி ஆகியோா் சென்றிருந்தனா்.
வேட்பு மனுத்தாக்கல் செய்தபின் செய்தியாளா்களிடம் ஹெச். ராஜா கூறியதாவது: கடந்த 2001 சட்டப் பேரவைத் தோ்தலில் காரைக்குடித் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். தற்போது நடைபெறும் தோ்தலிலும் மக்கள் எனக்கு ஆதரவு தருவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழகத்தில் நீட் தோ்வு நடத்தப்பட மாட்டாது என்று தோ்தல் அறிக்கையில் கூறியிருக்கிறாா்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மத்தியில் இருந்தபோது தான் நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது கூட ஓராண்டு விலக்குகேட்டபோது அதுவும் தரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அக்கூட்டணியினா் நீட் தோ்வு பற்றி பேசுகிறாா்கள். அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அனைத்துமே மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களை சோ்த்திருக்கிறாா்கள். ஆனால் திமுக தோ்தல் அறிக்கையில் ஏதாவது செயல்படுத்தப்படும் திட்டம் உள்ளதா? கடந்த தோ்தலில் 2 ஏக்கா் நிலம் தருவதாக சொன்னாா்கள். தந்தாா்களா? மத்தியில் இணக்கத்துடன் செயல்படும் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் வரவேண்டும் என்றாா்.