மத்தியஅரசின் இலக்கைத் தாண்டி தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதன்பின் செய்தியாளரிடம் கூறியதாவது, தமிழகத்தில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்.
நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்படும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடனுக்குடன் அதற்கான சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் இலக்கைத் தாண்டி தமிழகத்தில் கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகள் வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதையடுத்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். பேட்டியின்போது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எம்.எல்.ஏ தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.