சிவகங்கையில் ராணி வேலுநாச்சியாரின் 292−ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விடுதலைப் போராட்ட வீரரான ராணி வேலுநாச்சியார் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் ஜன.3, அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சிவகங்கை அருகே சூரக்குளத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ராணி வேலுநாச்சியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.தமிழரசி(மானாமதுரை), எஸ்.மாங்குடி(காரைக்குடி), சிவகங்கை அரண்மனை வாரிசுதாரர் மகேஷ்துரை ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் க.பாஸ்கரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.