சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ.விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய கபடி போட்டி நடைபெற்றது. திரளான ரசிகர்கள் போட்டியை கண்டு ரசித்தனர்.
விளாக்குளத்தில் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம், வடமாடு மஞ்சுவிரட்டு, ஆட்டுக்கிடாய் முட்டு சண்டைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற கபடி போட்டியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கபடி அணிகள் பங்கேற்று மோதினர்.
இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற விளாக்குளம் ஏ.அணியினரும் சி. அணியினரும் மோதினர். இதில் முதலாவதாக வெற்றி பெற்ற அணியினருக்கு உயரமான வெற்றிக்கோப்பையும் ரொக்கப் பரிசும் விழா குழுவினரால் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்த அணியினருக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கபடி போட்டியில் இடையில் விளையாட்டு மைதானத்தில் விழாக்குளத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் விளையாடிய சிலம்பாட்ட நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. கபடிப் போட்டியை விடிய விடிய ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.