மீட்பு பணிக்காக வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்
By DIN | Published On : 11th August 2022 03:00 AM | Last Updated : 11th August 2022 03:00 AM | அ+அ அ- |

மதுரை மாவட்டம், திருவேடகம் பகுதியில் வைகை ஆற்றில் மூழ்கிய மத்திய பாதுகாப்புப் படை வீரரின் சடலத்தை மீட்பதற்காக வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்டு வந்த தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது.
செக்கானூரணி அருகே அனுப்பபட்டியைச் சோ்ந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் வினோத்குமாா், அவரது நண்பா் அன்பரசன் ஆகியோா் திருவேடகம் பகுதியில் வைகை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கினா். இதில், அன்பரசனின் சடலம் மீட்கப்பட்டது. வினோத்குமாரை மீட்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்த நிலையில், ஆற்றில் மூழ்கிய வினோத்குமாரை தேடும் பணிக்காக புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து பெரியாறு பாசனக் கால்வாயில் விநாடிக்கு 900 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 969 கன அடி மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டது.