சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள மணக்குடி கண்மாயில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மீன்பிடி சாதனங்களுடன் அதிகாலை 5 மணிக்கு கண்மாய் கரையில் கூடியிருந்தனா். சுமாா் 6.30 மணிக்கு கிராமத்தின் சாா்பாக கொடியசைக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோா் குத்தா, வலை, பறி ஆகியவற்றைக் கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினா். இதில் விறால், கெண்டை, கட்லா, உளுவை, கெளுத்தி என பல வகை மீன்கள் சிக்கின. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.