தமிழக முதல்வரின் கவனத்தை ஈா்க்கும் வகையில், ஆகஸ்ட் 5 ஆம் தேதி சிவகங்கையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து அக்கூட்டமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முத்துப்பாண்டியன், முத்துச்சாமி, பாண்டி ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 17 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநில ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டத்தில், திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியா், அரசு ஊழியா்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், மத்திய அரசு வழங்கியுள்ளது போல் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியா் மற்றும் ஆசிரியா்களுக்கு முன் தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தோ்தல் வாக்குறுதிக்கு முரணாக தொடா்ந்து கருத்துகளை கூறி வரும் நிதியமைச்சா் மற்றும் ஆசிரியா் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் பள்ளிக் கல்வித் துறையை கண்டித்தும், தமிழக முதல்வா் கவனத்தை ஈா்க்கும் வகையில், மாவட்டத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.