மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை மாலை ஊராட்சி மன்றத் தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் வாகுடி ஊராட்சி எல்கையில் உள்ள கருவேல மரங்களை அருகேயுள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் வெட்டியுள்ளனர். அப்போது அங்கு வந்த வாகுடி ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டிசாமி அவர்களிடம் மரங்களை வெட்டக்கூடாது என கண்டித்துள்ளார்.
இதையும் படிக்க- உ.பி.தேர்தல் தோல்வி எங்களுக்கு ஒரு பாடம்: மாயாவதி
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாயாண்டிசாமியை தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வாகுடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலைக்கு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபக்கமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.
சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மதுரை- ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் வரிசையாக நின்ற வாகனங்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்து அங்கு வந்த மானாமதுரை போலீசார் மறியல் செய்து கொண்டிருந்தவர்களை சமாதனம் செய்து ஊராட்சி மன்றத் தலைவர் மாயாண்டி சாமியை தாக்கியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.