தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் சாலையில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரெட்டிபாளையம் சாலையில் சாத்தையா கோயில் மைதானத்தில் நடைபெறும் இவ்விழாவை தஞ்சாவூர் கோட்டாட்சியர் மு.ரஞ்சித் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் விடுவதற்காக தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 600 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை ஒவ்வொன்றாகப் பட்டியலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இக்காளைகளை கால்நடைப் பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனை செய்து பட்டியலில் விடுவதற்கு அனுமதித்து வருகின்றனர்.
களத்தில் காளைகளைப் பிடிப்பதற்காக 400 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 50 பேர் வீதம் களமிறக்கப்பட்டு வருகின்றனர். காயமடைந்த சிலர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை வரை நடைபெற உள்ள இவ்விழாவில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்