சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (செப். 10) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் சனிக்கிழமை (செப். 10) காலை 10 மணிக்கு பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோரியும் செல்லிடப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.