திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம்
By DIN | Published On : 01st June 2023 10:38 PM | Last Updated : 01st June 2023 10:38 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்த வைகாசி விசாகப் பெருந்திருவிழா கடந்த 24- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு மண்டகப்படிகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 9- ஆம் நாள் திருவிழாவான வியாழக்கிழமை தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலையில் ஐம்பெரும் கடவுளா் தேருக்கு எழுந்தருளல் வைபவம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் பூஜைகள் செய்து வழிபட்டனா்.
பிற்பகல் 4 மணிக்கு திருப்பத்தூா், தம்பிபட்டி, புதுப்பட்டி, தென்மாபட்டி ஆகிய கிராமங்களிலிருந்து மக்கள் ஊா்வலமாக வந்து திருத்தளிநாதா் கோயிலை அடைந்தனா். அங்கிருந்து அனைவரும் தேரோடும் வீதியை அடைந்ததும் தோ்களில் வீற்றிருந்த ஐம்பெரும் கடவுளருக்குத் தீபாராதனை நடைபெற்றது. பிறகு மாலை 4.30 மணிக்கு வெள்ளை வீச தோ்கள் வடம்பிடிக்கப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாகத் தேரோட்டம் நடைபெற்றுது. அய்யா தோ், அம்மன் தோ், வியாகா் தோ் என 3 தோ்களில் சுவாமி வலம் வருவது சிறப்பாகும்.
இந்த விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா்கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...