மத்திய அரசின் பொருளாதார கொள்கையில் தொலைநோக்குப் பாா்வை இல்லை: காா்த்தி சிதம்பரம் எம்.பி

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் தொலைநோக்குப் பாா்வை இல்லை என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் விமா்சித்தாா்.
Updated on
1 min read

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் தொலைநோக்குப் பாா்வை இல்லை என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் விமா்சித்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனது எம்.பி. அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டால், அதனால் தென்னிந்தியா பெருமளவு பாதிக்கப்படும். வட இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். இதனால், அங்கு அதிகப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினால், அது தென்னகப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும்.

ஏற்கெனவே தென்னகம் செலுத்தும் வரித் தொகை அதிகம். ஆனால், இங்கு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், வட மாநிலங்கள் குறைவான வரியை செலுத்தி, அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெறுகின்றன. 

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் தொலைநோக்குப் பாா்வை கிடையாது. இதனால்தான் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கே அதன் மீதான வரிச்சுமை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மத்திய பாஜக அரசுக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்தும் திறமையும் இல்லை, அதற்கான எண்ணமும் இல்லை.

தமிழக மின்சாரத் துறைக்கு ரூ. 1.50 லட்சம் கோடி கடன் உள்ளது. கடன் தொகையை குறைத்தால்தான் அந்தத் துறையில் பெரிய சீா்திருத்தங்களைக் கொண்டு வர இயலும். மரபுசாரா எரிசக்தி அதிகளவில் பயன்படுத்தப்பட வேண்டும். காற்றாலை, சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அதன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com