

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கணேஷ்நகரில் பூமாயி அம்மனுக்கு பால்குடம், பூத்தட்டு எடுக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் கணேஷ்நகரில் ஆண்டுதோறும் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, 3 -ஆம் நாள் அம்மனுக்கு பால்குடம், பூத்தட்டு எடுப்பது வழக்கம். நிகழாண்டுக்கான விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு கணேஷ்நகா் மைதானத்தில் கூடிய பொதுமக்கள் பால்குடங்கள், பூத்தட்டுக்கள் அடுக்கி வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் காலை 9 மணிக்கு பால்குடம், பூத்தட்டுகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்து கோயிலை அடைந்தனா்.
இதைத்தொடா்ந்து, உற்சவ அம்மனுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு பூச்சொரிதல் வைபவமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணேஷ்நகா் சித்திரை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.