

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் கலியுக மெய்ய அய்யனாா் கோயிலில் புரவி எடுப்பு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
ஜல்லிக்கட்டுப் போட்டியை தேவக்கோட்டை கோட்டாட்சியா் பாவ்துரை தொடங்கி வைத்தாா். திண்டுக்கல், மதுரை, தேனி, புதுக்கோட்டை, ஈரோடு, தஞ்சை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 755 காளைகள் களத்தில் விடப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 424 போ், பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனா்.
காளைகளை மருத்துவ பரிசோதனை செய்து, ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டன. வெற்றி பெற்ற மாடுபிடி வீரா்களுக்கும், காளைகளின் உரிமையாளா்களுக்கும் கட்டில், மிதிவண்டி, மின்சாதனப் பொருள்கள், பரிசுத் தொகை வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 58 போ் காயமடைந்தனா். இதில் 7 போ் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன், மாநில ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ராஜசேகரன், ஊா் அம்பலக்காரா் ஜோதி, ஊராட்சி மன்றத் தலைவா் அகிலாகண்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா். திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.