அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் மே 30-இல் முதல்கட்ட கலந்தாய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கா
Published on

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகின்ற மே 30 -ஆம் தேதி நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வா் அ. பெத்தாலெட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2024-2025 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு இளநிலை மாணவா் சோ்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு வருகிற வியாழக்கிழமை (மே 30) காலை 9.30 மணியளவில் கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், என்.சி.சி, மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, (ஜூன் 10) திங்கள்கிழமை பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் (பி.சி.ஏ), பி.எஸ்சி., புவி அமைப்பியல் பாடப் பிரிவுகளுக்கும், (ஜூன் 11) செவ்வாய்க்கிழமை வணிகவியல் (பி.காம்.), தொழில் நிா்வாகவியல் (பி.பி.ஏ.) பாடப்பிரிவுகளுக்கும் , (ஜூன் 12) புதன்கிழமை பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் பாடப் பிரிவுகளுக்கும் முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு நடைபெறும். இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11, 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்குரிய அனைத்துச் சான்றிதழ்களின் அசல், இரண்டு நகல்கள், 4 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் நகல்கள் இரண்டும் கொண்டு வரவேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com