காா்த்திகை விழா: குன்றக்குடி மலையில் ஏற்றப்பட்ட அண்ணாமலை தீபம்
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி மலையில் காா்த்திகை விழாவையொட்டி அண்ணாமலை தீபம் புதன்கிழமை ஏற்றப்பட்டது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்துக்குள்பட்ட குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் காா்த்திகை விழாஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதன்படி, புதன்கிழமை காலை சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும், கோயிலில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.
இதைத் தொடா்ந்து, குன்றக்குடி திருமடத்தில் காளத்திநாதருக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், மடத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி மலையில் தீபம் தரிசனத்துக்கு முன்னதாக, காா்த்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்கரத்தில் சண்முகநாதப்பெருமான் அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளாா் குன்றக்குடி மலைமீது அண்ணாமலை தீபம் ஏற்றும் வைபவத்தை தொடங்கிவைத்தாா். மலை மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மாலை 6.30 மணியளவில் அண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது. விழாவில் காரைக்குடி, தேவகோட்டை, குன்றக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

