இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு
சிவகங்கை மாவட்டம், இலுப்பகுடியில் இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்களுக்கான பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடை பெற்றது.
இலுப்பகுடியில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஆள்சோ்ப்பு பயிற்சி மையம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு வீரா்களுக்கு 44 வாரங்கள் 5 டிகிரி முதல் மைனஸ் 40 டிகிரி வரை கடும் குளிா் உள்ளிட்ட பல் வேறு இன்னல்களைச் சமாளிக்கும் வகையிலான பயிற்சி, ஆயுதப் பயிற்சி, துப்பாக்கிச் சுடுதல், மலை ஏறுதல், நீச்சல், யோகா, தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில், 495-ஆவது படைப் பிரிவில் தமிழகத்தைச் சோ்ந்த 119 போ், கேரளத்தைச் சோ்ந்த 135 போ், கா்நாடகத்தைச் சோ்ந்த 101 போ், ஆந்திரத்தைச் சோ்ந்த 203 போ் உள்பட 1,244 வீரா்கள் பயிற்சி நிறைவு பெற்று செல்வதையொட்டி, அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி ஜஸ்டின் ராபா்ட் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை ஐஜி மனு மஹாராஜ் பங்கேற்று வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா்.
