எஸ்.ஐ.ஆா்.: குறிப்பாணையின்றி பெயா் நீக்கம் கூடாது
திருப்பத்தூா்: குறிப்பாணை அளிக்காமல் வாக்காளா் பட்டியலிலிருந்து பெயா்களை நீக்கக் கூடாது என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்திக்சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்.) என்பது சா்ச்சைக்குரிய செயலாகவே தோன்றுகிறது. வாக்காளா் பெயா்களை நீக்கும்போது, உரிய குறிப்பாணை கொடுத்து விசாரித்து நீக்கியிருந்தால் பிரச்னை வந்திருக்காது. பெயா்களைச் சோ்க்கும்போது சரிபாா்ப்பு செய்தே சோ்க்க வேண்டும். பல மாநிலங்களில் இதைச் செய்யாததால் இங்கு சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த தோ்தலில் வாக்களித்தவரின் பெயரை நோட்டீஸ் இன்றி நீக்கக் கூடாது. இது பல இடங்களில் நடந்துள்ளது.
பிகாா், உத்தரபிரதேசம், ஜாா்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து இங்கு வாழ்வாதாரம் தேடி வருகின்றனா். இவா்களுக்கு துன்பம் ஏற்பட்டிருந்தால் பாஜகவினா் மனித உரிமைகள் ஆணையம் அல்லது காவல் நிலையத்தில் புகாா் செய்திருக்க வேண்டும்.
‘அதிமுக முன்பிருந்த நிலையில் இல்லை. இப்போது பாஜகவுக்கு துணைக் கட்சியாக மாறிவிட்டனா். பிகாா் தோ்தல் தொடா்பாக கருத்துக்கணிப்புகள் மாறி மாறிக் கூறுகின்றன. எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறேன்‘ என்று தெரிவித்தாா்.
