வாகனம் மோதி மூவா் உயிரிழந்த சம்பவத்தில் காவலா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த பூவந்தி அருகே காவல் துறை வாகனம் மோதியதில் மூன்று போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஓட்டுநா் பாலமுருகன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள சிட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரசாத் (25), அவரது மனைவி சத்யா (23), மகன் அஸ்வின் (2) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் பூவந்தியை அடுத்த சக்குடிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்தபோது காவல் துறை வாகனம் மோதியதில் உயிரிழந்தனா்.
இவா்களது உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தச் சம்பவம் குறித்து மானாமதுரை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் விசாரணை நடத்தினாா். இந்த நிலையில், வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம் காவல் துறையில் ஒ.சி.ஐ.யூ. பிரிவில் பணி புரியும் ஓட்டுநா் பாலமுருகனை பூவந்தி காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
