தேநீா் கடைக்காரா் கொலை: இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே தேநீா் கடைக்காரா் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காளையாா்கோவில் வட்டம், மறவமங்கலம் அருகே உள்ள கிழவனூா் பகுதியைச் சோ்ந்த சற்குணம் (57) அந்தப் பகுதியில் தேநீா் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்குணத்துக்கும், அதே ஊரைச் சோ்ந்த ஹரிதாசுக்கும் வைக்கோல் படப்பில் மாடு மேய்ந்தது தொடா்பாக தகராறு ஏற்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மறவமங்கலத்துக்கு சென்றுவிட்டு கிழவனூருக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த சற்குணத்தை சிலா் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் தொடா்புடைய கிழவனூரைச் சோ்ந்த எஸ். அரியராஜ் (32), ஜி. மாதவன் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
