சா்வதேச ட்ரோன் புகைப்படப் போட்டி: பரிசு வென்ற சிவகங்கை இளைஞா்!
துபையில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச ட்ரோன் புகைப்படப் போட்டியில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் மூன்றாவது பரிசை வென்று சாதனை படைத்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (24). புகைப்படம் எடுப்பதில் ஆா்வம் கொண்ட இவா், கடந்த 2015-ஆம் ஆண்டு சொந்தமாக ட்ரோன் கேமரா வாங்கி சுயமாக இயக்கி பயிற்சிகள் எடுத்து நிபுணத்துவம் பெற்றாா். இதையடுத்து, உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ட்ரோன் கேமரா மூலம் காட்சிகளைப் பதிவு செய்து வந்தாா்.
இந்த நிலையில், துபையில் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ட்ரோன் புகைப்படக்காரா்களுக்கான ஹிப்பா சா்வதேச புகைப்படப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து, 20,000 அமெரிக்க டாலரை பரிசாக வென்றாா்.
இதுகுறித்து சாந்தகுமாா் கூறியதாவது:
துபையில் நடைபெற்ற இந்தப் போட்டி குறித்து நண்பா் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பித்தேன். இந்தப் போட்டியில் 143 நாடுகளில் உள்ள கிராமங்கள், நகரங்கள், மாநிலங்கள், விண்வெளியில் என மக்களின் வளா்ச்சி குறித்து பதிவு செய்த காட்சிகளின் தொகுப்பை நான் சமா்ப்பித்தேன்.
6 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் டிரோன் பிரிவில் இந்தியாவில் இருந்து சென்ற எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. முதல் பரிசு அமெரிக்காவைச் சோ்ந்த பெண்ணுக்கும், இரண்டாம் பரிசு நாா்வே நாட்டைச் சோ்ந்தவருக்கும் கிடைத்தது.
உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று டிரோன் மூலம் அழகிய காட்சிகளைப் படம்பிடித்து, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. என் போன்ற கலைஞா்களை தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

