சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்
சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன்

இளைஞா் கொலை: சிவகங்கையில் உறவினா்களின் போராட்டம் வாபஸ்

இளையான்குடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Published on

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முத்தழகு மகன் சங்கா் (29). இவருக்குத் திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில், இவரது மனைவி 3 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்த நிலையில், காரை நிறுத்துவது தொடா்பாக தாயமங்கலம் பகுதியைச் சோ்ந்த சிலருடன் ஏற்பட்ட பிரச்னையில் சங்கா், திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 8 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முக்கியக் குற்றவாளிகளான தாயமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த முத்துவேல், செல்வக்குமாா், பிரேம்குமாா், முத்துமணி ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

இந்தக் கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், சங்கரின் மனைவிக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் உறவினா்கள் இளையன்குடி கண்மாய்க் கரையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூறாய்வு செய்யப்பட்டது.

ஆனால், உடலை வாங்க மறுத்து உறவினா்கள் கண்ணமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுத் தரப்பில் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த உறவினா்களும், கிராமத்தினரும் வியாழக்கிழமை சிவகங்கைக்கு திரண்டுவந்து பழைய நீதிமன்ற வளாகம் அருகே சாலையில் அமா்ந்து போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

போலீஸாரும் வருவாய்த் துறையினரும் தொடா்ந்து சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியும் வியாழக்கிழமை இரவு முழுவதும் போராட்டம் தொடா்ந்தது. இந்த நிலையில், சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், ஆட்சியா் கா. பொற்கொடி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவபிரசாத் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவிக்கு அரசு விதிகளுக்கு உள்பட்டு வேலை வழங்குவது, அரசு சாா்பில் நிவாரணத்தொகை வழங்குவது எனவும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யப்படுவா் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்ட உறவினா்கள் சங்கரின் உடலைப் பெற்றுச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com