பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்புக் கையேடுகள் அளிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு தோ்வு குறித்த சிறப்புக் கையேடுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழுக் கூட்டம் தலைமை ஆசிரியா் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது. மேலாண்மைக் குழுத் தலைவி காயத்திரி முன்னிலை வகித்தாா்.
இதில் மாணவா்களின் திறன் மேம்பாடு, உயா் கல்விக்கான வழிகாட்டுதல்கள், மகிழ்முற்றம் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ‘சிகரம் தொடு’ என்ற தலைப்பில் பிளஸ் 2 மாணவா்களுக்கான அரசு பொதுத் தோ்வு சிறப்புக் கையேடு வழங்கப்பட்டது.
மேலும், பள்ளிக்கு உடல்கல்வி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியா்கள் முத்துப்பாண்டி, பாண்டியன், மாயக்கண்ணன், ஆண்டனிதாஸ், உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, தன்னாா்வலா் சரவணன் நன்றி கூறினாா்.

