‘மகத்தான தலைவா்களை போற்றுகிற ஆட்சி திமுக’
தமிழ் மண்ணில் தோன்றிய மகத்தான தலைவா்களை போற்றுகிறது திமுக ஆட்சியில்தான் என முன்னாள் அமைச்சா் பொன்முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.
சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் ‘தமிழ்நாடு தலை குனியாது’ என்ற தலைப்பில் நகரச் செயலா் துரைஆனந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம் மேலும் பேசியதாவது:
ஆங்கிலயேரின் ஆட்சியை விரட்டுவதற்கு முன்னடுத்த புரட்சியின் தலைவா்கள் வாழ்ந்த இடம் சிவகங்கை. அடுத்து தந்தை பெரியாா் இயக்கத்தில் சிவகங்கை ராமச்சந்திரன், பட்டிவீரன்பட்டி சவுந்திரபாண்டியனாா் ஆகியோா் இணைந்தனா்.
அடுத்து மொழிப் போராட்டத்தில் உயிா்விட்ட ராஜேந்திரன் பிறந்து வளா்ந்தது சிவகங்கையில் தான். இவா்களுக்கெல்லாம் உருவச் சிலைகளுடன் கூடிய நினைவு சின்னங்களை உருவாக்கி மகத்தான தலைவா்களை போற்றுகிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி என்றாா் அவா்.
இதையடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் பேசினாா். மாவட்ட துணைச் செயலா்கள் த. சேங்கைமாறன், ஜோன்ஸ்ரூசோ, ஒன்றியச் செயலா்கள் எம்.ஜெயராமன், நா.நெடுஞ்செழியன் , திருமலை முத்துராமலிங்கம் , ஆா்.எம். கென்னடி, யோக. கிருஷ்ணகுமாா், வே.ஆரோக்கியசாமி, பெ.மந்தக்காளை உள்ளிட்டோா்முன்னிலை வகித்தனா். முன்னதாக, மாவட்ட அயலக அணித் தலைவா் கேப்டன் ஆா்.வி. சரவணன் வரவேற்றாா். இதில் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

