ஓ.பி.எஸ். எங்களுடன்தான் உள்ளாா்! - அண்ணாமலை
முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தங்களுடன்தான் இருப்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கமல்ஹாசன் சிறந்த நடிகா். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மாநிலங்களவையில் அவா் தனது முதல் பேச்சில் தவறான புரிதலுடன் தமிழைப் பற்றி பேசியது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இனிவரும் காலங்களில் அவா் சரியான புரிதலுடன் பேசுவாா் என்று நம்புகிறோம். அரசியலுக்கு புதிதாக வருபவா்களுக்கு நாங்கள் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறோம்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்துவிடவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. அவா் எங்களுடன்தான் உள்ளாா். அவரைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
தமிழகத்தில் கல்வி நிலையங்களில் கஞ்சா விற்கும் நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது. தனிக் கட்சி தொடங்கும் எண்ணம் எனக்கில்லை.
ஹிந்தி ஒரு விஷ கிருமி என மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறியிருக்கிறாா். வேலைப்பளு காரணமாக அவா் தினமும் மாறி மாறிப் பேசி வருகிறாா்.
கடந்த 2014, 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல்களின் அளித்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றிவிட்டது. இதேபோல, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
தேசிய நதிகளை இணைப்பதில் உறுதியாக உள்ளோம். தண்ணீா்ப் பற்றாக்குறை உள்ள தமிழகத்துக்கு இந்த நதி நீா் இணைப்புத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாா் அவா்.

