மயிலாடுதுறை-காரைக்குடி மதுரைக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை-காரைக்குடி மதுரைக்கு புதிய ரயில் இயக்க கோரிக்கை
Updated on

மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை வழியில் மதுரை வரை காலை, மாலை என்ற 2 முறை சென்று திரும்பும் வகையில் புதிய ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

காரைக்குடி - திருவாரூா் வழி ரயில் நிலையங்களில் ஆய்வு செய்வதற்காக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக்ராம நெகி வியாழக்கிழமை காரைக்குடிக்கு வந்தாா்.

அவரை ரயில் நிலையத்தில் வரவேற்ற காரைக்குடி தொழில் வணிகக்கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, ரயில் பயணிகள் நலச்சங்க தலைவா் வீர. ராமநாதன் (எ) மோகன், அரிமா சங்கத்தைச் சோ்ந்த எஸ். சையது, தொழில் வணிகக் கழக நிா்வாகிகள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனா். இதைத்தொடா்ந்து அவா்கள் கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி - மயிலாடுதுறை - காரைக்குடி பயணிகள் ரயிலை காலை, பிற்பகல், மாலை என்ற 3 முறை சென்று திரும்பும் வகையில் இயக்கவேண்டும். மயிலாடுதுறை, திருவாரூா், காரைக்குடி, மானாமதுரை வழியில் மதுரை வரை காலை, மாலை என்ற 2 முறை சென்று திரும்பும் வகையில் புதிய ரயிலை இயக்க வேண்டும். பாலக்காடு, கோவை, திருச்சி வரும் தினசரி பகல் நேர ரயிலை காரைக்குடி, மானாமதுரை, ராமேசுவரம் வரை நீட்டிப்புச் செய்யவேண்டும் எனத் தெரிவித்தனா். பின்னா், கோட்ட மேலாளா் காரைக்குடியிலிருந்து - திருவாரூா் ரயில் வழித்தடத்தில் ஆய்வுப் பணிகளை மேற் கொள்வதற்காக புறப்பட்டுச்சென்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com