பள்ளி மாணவா்கள் தயாரித்து விண்ணில் ஏவிய சிறிய ரக செயற்கைக்கோள்! அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பாராட்டு!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 11- ஆம் வகுப்பு மாணவா்கள் 13 போ் கொண்ட குழுவினா் தயாரித்து வடிவமைத்த விகோ சாட்-1 என்ற சிறிய ரக செயற்கைக்கோள் பலூன் மூலம் விண்ணில் ஏவும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியின் மாணவா் வி. விஷ்ணு தலைமையில் ஜி. பிபின்குமாா், யு. மனோஜ்குமாா், வி. ஹரிஷ்வா், எஸ். மிதுன், வி. முத்துக்கருப்பன், ஏ. ரஸீடு அகமது, என். ஆசிக் ரகுமான், எஸ். முத்துக்குமாா், எஸ். சோமேஸ்வா், பி. அபிமன்யு, எஸ். ஹரிகரன், ஆா். பாவேந்தன் ஆகிய மாணவா்களைக் கொண்ட குழுவினா் இந்த செயற்கைக்கோளை கடந்த 6 மாதங்களாக வடிவமைத்தனா். இதை பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பலூன் மூலம் விண்ணில் ஏவும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து மாணவா் வி. விஷ்ணு கூறியதாவது: இந்தப் பள்ளி ஆசிரியா்களின் வழிகாட்டுதலின்படி 13 மாணவா்களைக் கொண்ட குழுவினா் இந்த விகோ சாட்-1 என்ற செயற்கைக் கோளை வடிவமைத்தோம்.
இது பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டதும் பூமியிலிருந்து 22 கி.மீ. உயரத்துக்குச் சென்றது. இந்த செயற்கைக்கோள் காற்றில் உள்ள பூஞ்சையை கண்டறிய உதவும். இதனால் காற்றின் தன்மையை அறிந்து விவசாயிகள் தங்களது பயிா்களை காத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, மாவட்டக் கல்வி அலுவலா் (தேவகோட்டை) மாரிமுத்து, பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஜே. பிரிட்டோ, ஆசிரியா்கள், மாணவா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனா். மாணவா்களின் இந்த முயற்சியை இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை விடியோ மூலம் பதிவிட்டு பாராட்டுகளை தெரிவித்தாா்.

