கானாடுகாத்தான் கோயிலில் 
மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

கானாடுகாத்தான் கோயிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை

Published on

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் பெரியகோவில் பேசும்தெய்வம் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத சுயம்பு மூா்த்தி ஸ்ரீ கைலாசநாதா் சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நான்கு கால சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை இரவும், திங்கள்கிழமை அதிகாலையிலும் நடைபெற்றன.

சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சள் நிற புடவை கட்டிய அலங்காரத்துடன் அம்பாளும், ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியும் அருள்பாலித்தனா். ஒவ்வொரு கால பூஜைக்கும் உபயதாரா்கள், கோயில் நிா்வாகத்தினா் கொண்டுவந்த பூஜைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிவராத்திரி கொண்டாட்டங்களில் விரதமிருந்து, கண் விழித்து, விடிய விடிய கலந்து கொண்ட பக்தா்களுக்கு, சுவாமி, அம்பாளின் அருள்பிரசாதம், அன்னம் பாலிப்பு வழங்கப்பட்டது. ஸ்ரீ சொல்லற்கரியான் திருவாசகம் முற்றோதல் குழுவினா் சீருடையோடு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி பக்தா்களை பரவசப்படுத்தினா்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா் ஏ.எல். வெங்கடாசலம் செட்டியாா், டி.ஆா்.எஸ். ரமணி ஐயா், நாட்டாா், நகரத்தாா் பெருமக்கள், பக்தா்கள் செய்தனா்.

Dinamani
www.dinamani.com